Friday, October 13, 2006

தொடர்பூடகங்களும் பெண்களும்

ஊடகங்கள் சமூகத்தில் கருத்து நிலையை உருவாக்குவதிலும் பிரதிபலிப்பதிலும் பரப்புவதிலும் மிக முக்கிய பங்கு வகிப்பன. எனவே இந்த ஊடகங்கள் பெண்கள் பற்றிய விடயங்களை கையாளும் முறைமை சமூக முக்கியத்துவம் வாய்ந்தது. அனேகமாக பிரதான ஊடகங்கள் ஆண்களை மையமாக வைத்தே தகவல்களை வெளியிட்டு வருபவை. அதாவது அந்த ஊடகங்களுக்கான வாடிக்கையாளர்கள் (கேட்பவர்கள், பார்ப்பவர்கள், வாசிப்பவர்கள்) ஆண்களே என்ற கருத்தாக்கம் தான் முதன்மையானதாக இருக்கிறது. ஒரு தினப் பத்திரிக்கையை எத்தனை பெண்கள் வாசிக்கிறார்கள் ? அதிலும் அவர்கள் வாசிப்பது என்ன? ஞாயிறு பத்திரிகையில் பெண்கள் வாசிப்பது என்ன இவையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.
பத்திரிகையாயின் பெண்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தப் பக்கத்தில் பெண்கள் பற்றிய விடயங்கள், பெண்களுக்கான விடயங்கள், குடும்ப தளத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டிருக்கும். குழந்தை, சமையல், அழகு முக்கியமானவையாக இருக்கும். அத்துடன் பெண்களுக்கான ஒழுக்கம் கணவனை, உறவினர்களை, வயோதிபர்களை கவனித்தல், பராமரித்தல் பற்றிய விடயங்களும் கொடுக்கப்படும். இவை பெண்களுக்கு.
அடுத்து பெண்பற்றிய விடயங்களை, உதாரணமாக சினிமாவில், சினிமாவை பத்திரிகையில் கொண்டுவரல் இவற்றில் பெண்களை காட்சிப்படுத்தல் ஆண்களை வாசகர்களாக, பார்வையாளர்களாக வரித்துக் கொண்டதன் விளைவு. அது இன்றுவரை தொடர்வதுதான் அபத்தம். பெரிய திரை ஆண்களுக்கு, சின்னத்திரை (வீட்டுக்குள்) பெண்களுக்கு. இத்தகு பிரிப்பைத்தான் சகல ஊடகங்களும் கருத்தியல் ரீதியாக செய்கின்றன. இதனால், ஆண் பெண் நோக்கு, தேவை வேறு வேறாகி அவர்கள் இரு துருவங்களாக வளர்த்தெடுக்கப் படுகின்றார்கள். ஆனால் இவர்கள் ஒன்றாக ஒரே கூரையின் கீழ் வாழவேண்டியவர்கள். இன்னும் சொல்லப்போனால், ஆணுக்கு உலகமே வீடாகவும், பெண்களுக்கு வீடே உலகமாகவும் இவர்களை வளர்த்தெடுக்கும் பணியை நன்றாகவே தொடர்பூடகங்கள் செய்துவருகின்றன. இதை நாம் விளங்கிக் கொண்டால்தான், தொடர்பூடகங்களில் கொண்டுவரக் கூடிய மாற்றங்கள் பற்றியும் மரபில் சேர்க்க வேண்டிய விடயங்கள் பற்றியும் தெளிய முடியும்.
தொடர்பூடகங்கள் பெண்களை எப்படி கருத்துருவாக்கம் செய்கின்றன என்பதை ஆழமான புரிதலுடன் விளங்கிக் கொள்கின்ற போது, பெண்களின் முழு ஆளுமையும் குடும்பவட்டத்திற்குள் கட்டமைக்கப்படுவது புரியும். அது கூட எதிர்மறையாக இருப்பது தான் இன்று பெரிய சவால்.

அதாவது எம்மில் 70% ஆன பெண்கள் சமூகத்தில் தொழிற் துறைகளில் இறங்கியுள்ள நிலையில் குடும்பம் சார்ந்த கருத்துகள் இரட்டைச் சுமையை ஏற்படுத்துகின்றதேயொழிய, நடந்த மாற்றங்களுக்கு அமைய அவை கட்டமைக்கப்படவில்லை.
தாரணமாக, சமையலை இலகு படுத்த இரவில் காய்கறி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்து வையுங்கள் என்ற தகவல் பெண்களுக்காக தரப்படும்..அலுவலகம் சென்று வரும் பெண் (இன்று அனேகர் அப்படியானவர்கள்) ஐந்து மணிக்குப் பின் வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகள், சிலருக்கு தன்னார்வ விருப்புகள், (வாசித்தல், ரீ.வி. பார்த்தல், எழுதுதல்) குடும்பத்தினருடன் உரையாடல் எல்லாம் முடித்து படுக்க பத்து மணிக்கு மேலாகின்றபோது அடுத்த நாள் சமையலுக்கு தயார் படுத்த முடியுமா? இந்த விடயங்களை பிள்ளைகளுடன் கணவருடன் பங்கீடு செய்வது பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த நிலை, ஒட்டுமொத்த குடும்பச்சுமையைப் பெண் ஏற்றுக் கொள்ளவைக்கப்படுவதால் அவள் சிந்தனையும் விரிவுபட வழியில்லை. இதனால், விரைவில் சலிப்படையும் பெண் பல பிரச்சினைகளையும் உருவாக்க காரணமாகிறாள்.இதனால் தான் பல வருடங்களுக்கு முன் பெண் எழுத்தாளர்கள் பற்றி குறிப்பிடும் போது அவர்கள் வெறும் கண்ணீர் இழுப்பிகள் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. (இன்று சின்னத்திரை நாடகங்கள் பெண்களை வைத்து அதைச் செய்வது வேறு விடயம்).
nஇந்த நிலையில் தொடர்பூடகங்களில் பெண்கள் ஆர்வம் கொண்டு அதில் தம்மை இணைத்துக் கொள்வது பல யதார்த்தங்களை வெளிக்கொணர உதவும். அதிலும் பெண் பற்றிய அக்கறை கொண்ட பெண்களால்தான் இது ஏற்பட முடியும். எப்படி ஆளுமையுள்ள பத்திரிகையாளர்களால் ஒரு சமூக கருத்தியலை கட்டமைக்க, மாற்றியமைக்க முடியுமோ அப்படித்தான் பெண்பற்றிய யதார்த்தங்களை உணர்ந்த பெண்ணால் தான் தொடர்பூடகங்களில் கருத்துகளை முன்வைக்க முடியும். நம்மில் பலர் நம் சமூக யதார்த்தத்தை எமது சிந்தனையில் எடுக்காமலே கதைபண்ணிக்கொண்டும், கவிதை வடித்துக்கொண்டும், ஏற்கனவே எழுதிய பழமொழிகளை தூசி தட்டிக் கொண்டும் இருக்கிறோம்.
பெண்ணுக்குரிய பிரச்சினைகளை குடும்பமட்டத்தில் மட்டுமே வைத்துப்பார்த்து தீர்ப்பிடும் நிலையைத்தான் நாம் கொண்டியங்குகிறோம். இன்று நம் சமூகப் பெண்கள் சமூக தளத்திற்கு இழுத்து வரப்பட்டிருக்கிறார்கள். போர் தந்த மாற்றம் இது. இப்போது அதுதான் வாழ்வாகிவிட்டது. இந்த நிலையில் குடும்பத்தை மட்டும் பிரதானமாகக் கொண்டு பெண் இப்படி இருக்கவேண்டும் இது இது செய்ய வேண்டும் என்று கூறி ஒரு கருத்துரு வாக்கத்தை மேற்கொள்வது முரணானது. சாதாரணமா "அழகு' பற்றி கூறும் நாம் இன்று எமக்குத் தேவைப்படும் உடல் உறுதி, உடல் உற்சாகம் பற்றி கதைக்கிறோமா? அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை முக்கியப் படுத்துகிறோமா? முடி நீளமும் முக அழகும் எந்தக் கருத்தாக்கத்தில் எமக்குத் தேவை? இந்தக் கேள்விகளை நாம் கேட்டுப் பார்க்க வேண்டும்.

எனவே ஒரு சின்ன விடயமானாலும் அது இன்றைய யாதார்த்த பெண்ணுக்கு ஏற்புடையது தானா? என்ற சிந்தனை வேண்டும். அத்துடன் கீழ்மைப்படுத்தல், பலவீனப்படுத்தல் எந்தவிதத்திலும் பெண்ணின் இயற்கையான விடயம் என்ற தொனி இல்லாதவாறு கருத்துருவாக்கம் செய்தல் முக்கியமானது. பத்துப்பேரை ஒன்றாக அடிக்க முடியும் என்று திரைப்படத்தில் ஆணை கதாநாயகனாக காட்ட முடிந்திருக்கிறது. ஆனாலும் பலம் பொருந்தியவனாக ஆகமுடியும் என்ற நம்பிக்கை எவ்வளவு தூரம் பதிந்திருக்கிறது! இல்லாத ஒன்றையே நடக்க முடியாத ஒன்றையே இவ்வளவு தூரம் காட்டமுடியும் என்றால், யதார்த்தத்தை, உண்மை விடயங்களை எமது வாழ்வாதாரங்களை ஏன் காட்டமுடியாது? ஏன் வெளிக்கொணர முடியாது?
வெளியில் இருந்து ஏதோ ஒருவகையில் தொடர்பூடகங்களுடன் தொடர்பு கொள்ளும் பெண்களின் சிந்தனைக்காக மேற்கூறிய விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
அடுத்த விடயம் ஊடகங்களில் பணிபுரிவது!
இது ஒரு பெரிய சவால் தான்.
மூன்றாம் உலக நாடுகளிலேயே முதல்முதல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு, முதல் பெண் பிரதமரைக் கொண்ட நாடு என்ற பெருமையை வைத்திருக்கிறோம் நாம். பெண்கள் அதிலும் தமிழ் பெண்கள், சமூகத்தில் பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதென்பது பெரிய விசயம். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் விடயத்தில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களில் ஜி.ஜி.யால் சொல்லப்பட்ட ஒரு விடயம். "ஆங்கிலேயரின் நாகரிகத்திற்கு ஆட்பட்டு எமது குடும்பப் பெண்களை "பொது மகளிர் ஆக்கப்பார்க்கிறார்கள்" என்பது. இப்படி சமூக சிந்தனையை பெண்கள் ஏற்படுத்திக் கொள்வதே பெரும் சிரமமாக இருந்த வரலாற்றில் வந்த நாம், இன்று போராளிப் பெண்களைக் கொண்டியங்குகிறோம்; பெண் தலைமைத்துவ குடும்ப மரபைக் கொண்டிருக்கிறோம். ஆனால் தொடர்பூடகங்களில் பணிபுரிவதற்கு முடியாதிருக்கிறது.
தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்க பெண் தேவை, கணீர் என்ற குரலில் நேயர்களைச் சொக்கவைக்க பெண் தேவை. பத்திரிகையை கவர்ச்சியாக்க பெண் தேவை; ஆனால், ஆழமான கருத்தியல்களை சமூக அபிவிருத்தி, அரசியல், பொருளாதாரம் பற்றிய அக்கறைகளை கொண்டு தொடர்பூடகங்களில் இயங்க பெண் "இல்லை"
ஏன்?
பெண்ணுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகள் இவை சார்ந்து பெண் ஆர்வப்படல் என்பன இல்லாமல் இருக்கின்றது. இதற்குக் காரணம் சமூகம் பெண்-தொடர்பூடகம் பற்றி வைத்திருக்கும் விழுமியங்கள். போருக்குள்ளால் புடம் போடப்பட்ட நாங்கள் எங்கள் பலத்தை சரியாக இனம் காணவில்லை. சமூகத்தளத்தில் எம்மால் ஆளுமையாக இயங்கமுடிகிற போது ஏன் தொடர்பூடகங்களில் அதை வெளிக்கொணர முடியாது? பெண் ஏமாற்றப்பட்ட செய்தி, பெண் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட செய்தி சுவாரஸ்யமான செய்திகளாக மட்டும் போடப்படும் நிலைதான் உள்ளது. இதுவே பெண்கள் ஊடகங்களுக்குள் வேலை செய்கின்றபோது, இயல்பாகவே அடுத்து என்ன நடந்தது, குற்றம் புரிந்த நபர் யார்? அவருக்கு கிடைத்த தண்டனை என்ன? அல்லது தண்டனை கிடைக்கவில்லையா? இது எல்லாம் செய்தியாகும். இதுவே அக்குற்றத்தை குறைப்பதற்குமான வழியுமாகும்
அபிவிருத்தி, மீள்குடியேற்றம் பற்றியெல்லாம் சிந்திக்கும் போது, பெண்ணைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள்? சமூக மறு உற்பத்தி பண்பைக் கொண்டுள்ள பெண், குடும்பங்களை பராமரிக்கும் பெண், சமூகத்தில் முக்கிய கடமைகளை நிறைவேற்றும் பெண் கவனிக்கப்படுவதில்லை. அவளது போசாக்குப் பற்றியோ, சுகாதாரம் பற்றியோ யாருக்கு அக்கறை? இது பற்றி பெண்களால்தான் கேள்வி எழுப்ப முடியும். பெண்கள் சமூகத்தின் முக்கிய பங்காளிகள் என்பது எல்லாவிதத்திலும் முன்னிலைப் படுத்தப்பட வேண்டும். பெண்களின் ஒவ்வொரு செயலும் ஆளுமை மிக்கதாக மிளிர வேண்டும். இதற்கு பெண் தான் தன்குடும்பம், தன்சமூகம், தன் நாடு ஆகியவற்றில் கொண்டிருக்கக்கூடிய தொடர்பு முக்கியம். தொடர்பூடகங்களிலும் முடிவெடுக்கும் தகுதியைப் பெற்ற பெண்கள் இலங்கையில் இல்லை. அதிலும் தமிழ்ப் பெண்கள் அறவே இல்லை. பெரும்பாலும் ஊடகங்களில் வேலை செய்யும் பெண்கள் அலுவலகத்தினுள்ளே வேலை செய்பவர்களாகவே உள்ளனர். இன்றைய எமது ஊடகத்துறைகூட குறிப்பாக தமிழ் ஊடகத்துறை பெரியளவில் வளர்ச்சியடைந்ததாக இல்லை. ஒரு விவரணக் கட்டுரை எழுதுவதற்கான தகவலை திரட்ட வெளியில் சென்று வருதல், புலனாய்வு கட்டுரைக்கான தகவல் சேகரிப்பு என்பவற்றைக் கூட நாம் செய்ய முடிவதில்லை. ஆளணி பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பின்மை என்பன முக்கிய காரணங்களாகும். அத்துடன் தொடர்பூடகத்துறை கல்வியியல் ரீதியாக வளர்த்தெடுக்கப்படாததும் ஒரு குறைபாடு. இன்று அந்த வாய்ப்பு உள்ளது. அதில் பெண்களையும் உள்வாங்கி பயிற்சி அளித்தால் நம்பிக்கை தரக்கூடிய யதார்த்த சமூகத்தை கட்டியெழுப்பலாம். எல்லாவற்றுக்கும் மேலாக ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு ஓரளவுக்காவது அந்தந்த நிறுவனங்களிலாவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஊடகத் தொழில் என்பது எனக்குப் பிடித்ததையும் உங்களில் ஒருவருக்கு பிடித்ததையும் எழுதுவதல்ல.சமூக யதார்த்தத்தில் இருந்து பல்வேறு கோணங்களிலும் பிரச்சினைகள் அணுகப்பட்டு ஆழமான சிந்தனையில் வளமான சமூகத்தை எதிர்பார்த்து கட்டமைக்கப்படுவது, அல்லது முன்வைக்கப்படுவது.இதில் சமூகத்தில் சரிபாதிக்கும் மேலிருக்கும் பெண்களும் பங்கெடுத்துக் கொள்வது ஒரு சமநிலைச் சமூகத்தை உருவாக்க, பிரச்சினைகளை தெளிவாக அணுக வழிகோலும்.உலகெங்கும் இன்று பெண்கள் தொடர்பூடகங்களில் மிகுந்த தாக்கம் மிக்கவர்களாக இயங்குகிறார்கள். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பெண் ஊடகவியலாளர்கள் 40 வீதத்தினர் உள்ளனர். போர் காவு கொண்ட எம் சமூகத்திலும் பெண்கள் அரிய பல பணிகளை ஆற்றி வருகின்றனர். ஆனால், அவை சரியாக இனம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்படவில்லை. இவற்றை செய்யக்கூடியவர்கள் பெண்கள் தான் அதிலும் சமூகம், பெண் பற்றிய சிந்தனைகளைக் கொண்டவர்கள். அவர்களை ஊடகங்கள் வரவேற்கவேண்டும்.
அத்துடன் சமூகத்தளங்களில் அகலக்கால் வைத்திருக்கும் நம் பெண்கள் தம் சிந்தனையிலும் சமூக தளத்திலிருந்தும் தம் இயங்கியலுக்கான மரபுகளைக் கட்டியெழுப்பவேண்டும். அதற்கு இந்த உணர்வு உள்ள பெண்கள், ஊடகங்களில் உள்வாங்கப்படவேண்டும் அல்லது உள்வாங்கப்பட்ட பெண்கள் இத்தகு சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.